சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 352 – எஸ்.கணேஷ்
'ஜென்டில்மேன்' வெற்றிப் படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் குஞ்சுமோனுக்காக ஷங்கர் இயக்கிய இரண்டாவது படம் ‘காதலன்’. இந்தப் படமும் வணிக ரீதியில் வெற்றிப் படமாக அமைந்து ஷங்கர் திரையுலகில் அழுத்தமாக கால் பதிக்க உதவியது.
கல்லூரியில் மாணவர் தலைவராக பொறுப்பு வகிக்கும் பிரபுதேவா, நிகழ்ச்சி ஒன்றுக்கு தலைமை தாங்குவதற்காக கவர்னர் கிரிஷ் கர்னாடை அழைக்கச் செல்கிறார். அப்போது கவர்னர் மகளான நக்மாவைப் பார்த்து அவர் மீது காதல் கொள்கிறார்.
நக்மா மீது கொண்ட காதலால் அவர் நாட்டியம் கற்றுக் கொள்ளும் நடனப்பள்ளிக்குச் சென்று தானும் நடனம் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறார். ஆரம்பத்தில் நக்மா, பிரபுதேவாவை கண்டுகொள்ளாமல் இருந்தாலும் பின்னர் அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார்.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தால், கவர்னர் தன் மகளை வெளியே எங்கும் அனுப்பாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துகிறார். ஆயினும் பாதுகாப்பு அதிகாரிகளை ஏமாற்றிவிட்டு பிரபுதேவாவுடன் நடன விழா ஒன்றுக்குச் சென்றுவிடுகிறார் நக்மா.
காவலர்கள் இருவரையும் கண்டுபிடித்து விடுகிறார்கள். பிரபுதேவாவை போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து கடுமையாகத் தாக்கி சித்ரவதை செய்கின்றனர். போலீஸ்காரராகப் பணியாற்றும் பிரபுதேவாவின் அப்பா எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஒரு வழியாக தன் மகனை வெளியே கொண்டு வருகிறார்.
வெளியே வந்த பிரபுதேவா, நக்மாவைப் பார்க்க கவர்னர் மாளிகைக்குச் செல்லும்போது, பல குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குக் காரணமான ரகுவரன் கவர்னர் ஆதரவுடன் அவரது மாளிகையிலேயே மறைந்திருப்பது தெரிய வருகிறது.
கவர்னரே பொது மருத்துவமனையில் குண்டுவைத்து பொதுமக்களைக் கொல்லத் திட்டமிட்டிருப்பது பிரபுதேவாவுக்குத் தெரிய வர, தனது கல்லூரி நண்பர்கள் உதவியுடன் பொதுமக்களைக் காப்பாற்றுகிறார்.
‘காதலன்’ படம் நான்கு தேசிய விருதுகளை வென்றது. ‘என்னவளே அடி என்னவளே’ என்ற பாடல் மூலம் பின்னணிப் பாடகராக அறிமுகமான உன்னி கிருஷ்ணன், தான் பாடிய முதல் பாடலுக்கே தேசிய விருதைப் பெற்றார். சிறந்த ஒலிப்பதிவுக்காக ஏ.எஸ்.லட்சுமி நாராயணன் மற்றும் வி.எஸ்.மூர்த்தி ஆகியோரும், படத்தொகுப்புக்காக லெனின்- வி.டி.விஜயனும், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்டுக்காக வெங்கியும் ‘காதலன்’ படம் மூலம் தேசிய விருதுகள் பெற்றனர்.
‘ஹம்ஸே ஹே முக்காபலா’ என்ற பெயரில் இந்தியிலும், ‘பிரேமிக்குடு’ என்ற பெயரில் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்தப் படம் வெளியானது.
இப்படத்தில் இடம்பெற்ற ஒன்பது பாடல்களும் ‘சூப்பர் டூப்பர்’ ஹிட்டாகி படத்தின் வெற்றிக்கு பெரிய அளவில் துணைபுரிந்தன.
கண்ணாடியாலேயே வடிவமைக்கப்பட்ட பேருந்து ஒன்றில் பிரபுதேவா ‘ஊர்வசி ஊர்வசி’ என்ற பாடலுக்கு நடனமாடுவதும், ‘என்னவளே அடி என்னவளே’ என்ற பாடலுக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்ட விதமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.
பிரபுதேவா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கிரிஷ் கர்னாட், ரகுவரன், வடிவேலு, அஜய் ரத்னம், அல்லு ராமலிங்கய்யா, தாமு, நக்மா, மனோரமா.
திரைக்குப் பின்
படத்தொகுப்பு : பி. லெனின் – வி.டி. விஜயன்
ஒளிப்பதிவு : ஜீவா
பாடல்கள் : வாலி, வைரமுத்து
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
வசனம் : பாலகுமாரன்
தயாரிப்பு : கே.டி. குஞ்சுமோன்
திரைக்கதை, இயக்கம் : ஷங்கர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக